கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் வகையில் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுக்கே தள்ளாடும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனை கண்டித்து பொருளாதார பிரச்னையை சரிசெய்யக்கோரியும், அதிபர் பதவி விலக வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்திய பொதுமக்கள், கொழும்பு நகரில் உள்ள அதிபர் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
இதனால் பெரும் பதற்றம் நிலவியது. ராணுவம் மற்றும் போலீசாரின் நடவடிக்கையை மீறி அதிபர் வீட்டுக்குள் பொதுமக்கள் நுழையும் நிலை ஏற்பட்டதால் கோத்தபய ராஜபக்சேவை ராணுவத்தினர் மீட்டு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வந்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சியை அமைக்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.