சென்னை: காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில், தொண்டை மண்டல ஆதீனம் மடமும் ஒன்று. இதன் 232வது ஆதீனமாக இருந்த ஞானபிரகாச பரமாச்சாரியார், கடந்த ஓராண்டுக்கு முன், இயற்கை எய்தினார். இதை தொடர்ந்து, நடராஜன் என்பவர் 233வது திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியராக, 2021 மார்ச் 5ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் நிர்வாக குழு கமிட்டிக்கும், ஆதீனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, கமிட்டிக்கு ஆதீனம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் கூறியதாவது: மடத்துக்கு 89 இடங்களில் சொத்துகள் உள்ளன. சில இடங்களில் சொத்துகளுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்தேன். மடத்தில் கட்டிடங்கள், பூங்காவுக்கான கட்டுமான பணிகள் மேற்கொண்டேன். கொரோனா காலத்தில் 8,000 பேருக்கு, மடத்தின் சார்பில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நித்தியானந்தா சிஷ்யன் எனக்கூறி, மடத்தை கைப்பற்ற நினைத்த சந்தீப் என்பவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரை வெளியேற்றினேன்.
நான் செய்யும் பணி, நிர்வாக கமிட்டி குழுவுக்கு பிடிக்கவில்லை. அவர்களது செயல்பாடு, மிரட்டல் விடுக்கும் விதமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால், கடந்த வாரம் நான் ஏற்றுள்ள பொறுப்பை துறக்கும் கடிதத்தை, கமிட்டியிடம் கொடுத்தேன். 2 வாரத்துக்குள் மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளேன் என்றார். இதுதொடர்பாக, நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர் குப்புசாமியிடம் கேட்டபோது, உடல் நலம் கருதி, பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடிதம் கொடுத்துள்ளார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பின் முடிவு தெரியும். மடத்துக்கு சென்று, அவரிடம் பேசிய பின், மற்ற விவரம் தெரிவிக்கிறோம் என்றார்.