சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் முனையம் என்றும், சர்வதேச முனையத்திற்கு அண்ணா முனையம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டில் இந்த இரு முனையங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்தன. அப்போது இந்த இரு முனையங்களில் இருந்த தலைவர்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று, தலைவர்களின் பெயரை குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரை உள்நாட்டு முனையத்திற்கு மீண்டும் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்க அமைப்பினர் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலிருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல விடாமல் வெளியே நிறுத்தி வைத்தனர். அதன்பின்பு நேற்று காலை 10.30 மணி அளவில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, வெளியே வந்த தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விமானநிலையை இயக்குனரிடம் மனுவை கொடுத்திருக்கிறோம். மேல் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை அனுப்புகிறோம். அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார். குறுகிய காலத்தில் முடிவு எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.