×

வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துச் செய்தி

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (2.04.2022) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் நலனில் கழக அரசு என்றுமே அக்கறையோடு செயல்பட்டு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உகாதி திருநாளில் அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வரலாற்றுரீதியாகவே விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டுக் கூறுகளில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.

 ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இந்தத் தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவு வலுப்பட வேண்டும். நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்றுத் தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ugadi ,Chief Stalin , Chief Stalin, Greetings, Ugadi New Year
× RELATED அனைத்து மக்களும் எல்லா நலன்களும்,...