கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுசீலா பேசியதாவது:
கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை முன்னேறிய சமூகமாக மாற்றும் வல்லமை படைத்த ஆயுதம். எனவே, ஒவ்வொரு மாணவரும் கல்வியை தங்கள் இரு கண்களாக பாவித்து சிறப்பான முறையில் கற்றால் மட்டுமே எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும். மாணவர்கள் தேவையில்லாத பழக்க வழக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறும் அறிவுரைகளை மாணவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் முறையான சீருடை அணிந்தும், காவல் துறையினரை போல் முடிவெட்டியும் ஒழுங்கீனம் இல்லாத வகையில் சிறந்த மாணவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், மாணவர்கள் தேவையில்லாத பழக்கத்திற்கு அடிமையாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருக்கின்றார்களோ? அவர்களை பற்றிய தகவல்களை ரகசியமாக காவல்துறைக்கு தெரிவித்தால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ஆசிரியர் அருண்குமார், தலைமை காவலர் புஷ்பா, சுகந்தி ஆகியோர் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.