×

திண்டுக்கல் அருகே தாய், மகன் வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும்,மகனும் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு செல்வம் வேலையை  முடித்து விட்டு, தனது தோட்டத்து வீட்டில் தாய் சௌந்தரம்மாள் உடன் தங்கியுள்ளார். இன்று காலை அவரது தோட்டத்துக்கு பால் கறக்க பால்காரர் வந்தபோது, அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன், வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து சம்பவத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் யார்? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை ஏதும் நடைபெற்றதா? என்ற கோணத்தில் எரியோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே தாயும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dinduckal , Dindigul, mother-son, murder, police, investigation
× RELATED திண்டுக்கல் அருகே நள்ளிரவில் இளைஞர் சுட்டுக் கொலை!!