ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில், தமிழகம் மாளிகை பூங்காவில் பூத்துள்ள பால்சம் மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும். தற்போது, தாவரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகளில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்தன.
இதனால், அனைத்து பாத்திகளிலும் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகின்றன. தமிழகம் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் தற்போது பல வண்ணங்களில் பால்சம் மலர்கள் உட்பட பல்வேறு மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. தமிழகம் மாளிகை செல்லும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.