டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த 10.5 சதவீதம் வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆணையம் செய்யும் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழக்கு ஒரே ஒரு காரணத்தால்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வன்னியருக்கான 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும், இது தொடக்கம்தான் என்று குறிப்பிட்டார். எந்த பிரிவினருக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.