×

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான இடமாக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச அளவிலான போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமைமிகு தருணமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Tags : Mamallapuram ,Chennai ,Minister ,Meyanathan , Mamallapuram, July 27 - August 10, Chess Olympiad, Minister Meyyanathan
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ