டெல்லி: சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். போபால் - சென்னை இடையேயான நேரடி விமான சேவையை, ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த விழாவில், பேசிய ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டு உள்ளோம்.
மேலும், ரூ.38,000 கோடி செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருவதாகவும், அதேபோல் மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் கட்டி வருவதாகவும் தெரிவித்தார். சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டு உள்ளோம். அதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்து உள்ளோம். மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் கூறினார்.