சென்னனை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏப்ரல் 5 முதல் 7-ம் தேதி வரை அப்பல்லோ மருத்துவர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ஆஜரானார்.
அப்பொழுது அவரிடம் ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதாக கூறினார். ஏற்கனவே ஆஜரான அப்பல்லோ மருத்துவர்களிடம் சில விளக்கங்களை தெளிவுபடுத்த வேண்டி இருப்பதால் அவர்களிடம் ஏப்ரல் 5 முதல் 7-ம் தேதி வரை 3 நாட்கள் விசாரணை நடைபெற உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் புதிய செயலாளராக சஷ்டிசுபன் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.