சேலம்: சேலம் மாவட்டம் காரிப்பட்டி பக்கமுள்ள நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (24). போர்வெல் மோட்டார் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3ம் வகுப்பு மாணவியான 8 வயதுள்ள சிறுமியிடம், சோளக்காட்டை சுற்றிக்காட்டுவதாக கூறி அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அச்சிறுமி நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாயார், காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். மணிகண்டனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி முருகானந்தம் விசாரித்து, மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ₹40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ₹2.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.