ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் தொட்டிகளில், ஆப்கானிகா மலர்கள் உட்பட பல்வேறு மலர்கள் பூத்துள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் அனுசரிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது போன்று ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்வது வழக்கம். இதனால், தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான மலர்கள் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர்கள் செடிகள் நடவு செய்யப்படும்.
மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் முற்றுகையிடுவது வழக்கம். தற்போது மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகள் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை அலங்கரிப்பதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலர் செடிகள் பூங்காவில் உள்ள மேல் நர்சரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நர்சரியில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் தற்போது ஆப்கானிகா, பிரமிளா, சைக்ளோமன் உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துள்ளன.
ஓரிரு நாட்களில் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் இந்த மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் கோடை சீசன் துவங்கும் நிலையில், தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்லலாம்.