ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிங்கு ராஜா, ராணி பாய் நினைவு மண்டபம் மற்றும் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாருக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் அலுவலால் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா வேலம் ஊராட்சியில் தமிழறிஞர் மு.வரதராசனாரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தையும், ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிங்கு ராஜா, ராணி பாய் நினைவு மண்டபத்தை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் அலுவலால் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழறிஞர் மு.வரதராசனார் திருவுருவச் சிலை அமைப்பது, மற்றும் தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவு மண்டபத்தை புதுப்பிப்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ராணிப்பேட்டை முத்துகடை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி மற்றும் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இதில், ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார்கள் ஆனந்தன், வெற்றிகுமார், ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் ஏகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.