சிவகாசி: வெம்பக்கோட்டை மேட்டுகாடு அகழாய்வு பணியில் பழங்கால பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கீழடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் அதற்கான பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் கடந்த 15ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார். ேநற்று முன்தினம் வெம்பக்கோட்டை மேட்டுகாடு அகழாய்வில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள்கள், வட்ட சில்லுகள் கிடைத்துள்ளன. அகழாய்வு பணி இயக்குனர் பாஸ்கர், பொன்னுச்சாமி ஆகியோர் கூறுகையில், ‘‘இதுவரையிலும் 75 செமீ உயரம் தோண்டப்பட்டுள்ளது. இதில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் தோண்டுகையில், இன்னும் அதிகமான பழங்காலப் பொருட்கள் கிடைக்கும்’’ என்றனர்.