மும்பை: ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மும்பையில் மின்சார கட்டணத்தை உயர்த்த போவதாக டாடா பவர், அதானி குழுமம் ஆகிய மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு டன் நிலக்கரி ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.அதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு டன் நிலக்கரின் விலை 300 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மும்பையின் தெற்கு பகுதி முழுவதும் மின் விநியோகம் செய்துவரும் டாடா நிறுவனம் பெரும்பாலும் நிலக்கரியை இறக்குமதி செய்தே மின் உற்பத்தி செய்துவருகிறது. மும்பையின் புறநகரில் மின் விநியோகம் செய்துவரும் அதானி நிறுவனம் உள்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கும் நேரத்த்தில் மட்டும் இறக்குமதியை நம்பியுள்ளது.
எனவே டாடா நிறுவனம் மின்கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டாடா நிறுவனம் ஒரு யூனிட்டிற்கு ரூ.1.10 வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதானி நிறுவனமும் யூனிட்டிற்கு 25 பைசா வரை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா மின்வாரியம் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை அமல்படுத்த தீர்மானித்துள்ளது.