கோவை: ஜவுளி உற்பத்திக்கான நூல் விலையேற்றம் தொடர்ந்தால் கோவை ஈரோடு மாவட்டங்களில் பின்னலாடை தொழில் முற்றிலும் முடங்கிவிடும் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்திக்கான நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. ரெடிமேட் ஆடைகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனிடையே பெட்ரோல் டீசல் விலையேற்றமும் சேர்ந்துகொண்டதால் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து 2 நாட்கள் நடந்த வேலை நிறுத்தத்தால் ஈரோடு ஜவுளி சந்தையில் ரூ.5 கோடி வர்த்தகம் முடங்கியது. ஜவுளி உற்பத்திக்கு தேவையான பஞ்சு விலை தொடர்வதாலும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கோவை மாவட்ட உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
இதே நிலைமை நீடித்தால் பின்னலாடை தொழில் முடங்கும் எனக்கூறும் அவர்கள் ஒன்றிய அரசு அவசர கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் நூல் விலையேற தொடங்கியது. நூலின் விலையேற்றம் 18 மாதங்களாக தொடர்வதால் செய்வதறியாமல் திகைப்பில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.