உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை சுத்தம் செய்ய மாணவியை ஈடுபடுத்திய வைரல் வீடியோ வெளியானது. இதனால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். உத்திரமேரூர் அடுத்த ஆனம்பாக்கம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆனம்பாக்கம், நீர்குன்றம், நெற்குன்றம், பட்டா, படூர், சிறுமயிலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 206 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையை, அங்கு 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, கழுவி சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர், மற்றும் சக மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று காலை ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரித்னர். பின்னர், தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு உரிய பதில் வரவில்லை என தெரிகிறது. இதைதொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் அப்பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர், பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, ெபற்றோருக்கு உறுதியளித்தார். இயைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.