சென்னை: மகளிருக்கு சரிசமமான பல பதவிகளை தமிழகத்தில் நம் முதல்வர் மட்டுமே வழங்கி உள்ளார், என்று பெரம்பூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கோவை சரளா கூறியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் வகையில் ‘மனிதநேய திருநாள்’ என்ற தொடர் நிகழ்ச்சிகள் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மாலை, 65வது நிகழ்ச்சியாக ‘‘மாதரை காக்கவே சுழல்நிதி; மாண்புகள் காப்பவர் தளபதி’’ என்ற தலைப்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி திடலில் நடைபெற்றது. திமுக பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்து பேசுகையில், ‘‘ஆட்சி அமைத்த நாளில் இருந்து மகளிரின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். இதுவரை அவரது திட்டங்களில் 80 சதவீதம் மகளிரின் நலன் சார்ந்தே அமைத்துள்ளது. அத்தகைய முதலமைச்சருக்கு மகளிரின் வாழ்த்துகள் முக்கியமானது’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை கோவை சரளா பேசுகையில், ‘எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இன்று பெண்களுக்கு சரிசமமான அளவில் பல நல்ல பொறுப்புகளை நமது முதல்வர் மட்டுமே வழங்கியுள்ளார். முன்னாள் முதல்வரின் மகனாக இருந்தாலும் சாதாரணமாக அல்லாமல், கடும் உழைப்பின் மூலமே முதல்வர் ஆகியுள்ளார். பேச்சில் நிதானம், செயல்பாட்டில் தெளிவு, நடையில் மிடுக்கு என நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்,’’ என்றார்.இதையடுத்து, 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் சுழல் நிதியினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகை கோவை சரளா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி மகேஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.