கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே அக்னி வசந்த விழாவில் நேற்று நடந்த திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் தென் மகாதேவ மங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அக்னி வசந்த விழாவை ஒட்டி மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தெருக்கூத்து நாடகங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி எம்எல்ஏ பேசுகையில், ‘பர்வத மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மேலும், பர்வத மலை அடிவாரத்தில் விரைவில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டும் பணிகள் நடைபெற உள்ளது. கிராமப்புறங்களில் மக்கள் ஒற்றுமையுடன் ஜாதி, மத பேதமில்லாமல் வாழ்ந்திட இதுபோன்ற திருவிழாக்கள் நடைபெறுவது அவசியம்’ என்றார்.