மும்பை: சினிமாவிலிருந்து விலக முடிவு செய்திருந்தேன். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர் என்றார் ஆமிர்கான். இது குறித்து அவர் கூறியது: எனது குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படங்களில் நடித்தபடி, தயாரிப்பு நிறுவனம் மூலமும் படங்களை தயாரித்து வந்தேன். அதனால் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இடையே பெரும் இடைவெளியை சினிமா ஏற்படுத்திவிட்டதாக கருதினேன். அதனால் தயாரிப்பு நிறுவனத்தை மூடிவிட்டு, நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். இது பற்றி கிரணிடம் (விவாகரத்துக்கு முன்பு) கூறினேன். அதேபோல் எனது மகன், மகளிடமும் சொன்னேன். அவர்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். இது சரியான முடிவு கிடையாது என சொன்னார்கள். நீண்ட ஆலோசனைக்கு பிறகே சினிமாவிலிருந்து விலகும் முடிவை கைவிட்டேன். அப்போது கிரண் எனக்கு பெரும் உதவியாக இருந்தார். சினிமா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை அவர் அப்போது புரிய வைத்தார். இவ்வாறு ஆமிர்கான் கூறினார்.