சென்னை: முதல்வரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயல் கண்டிக்கதக்கது, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்வர் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அருவறுப்பு தரும் அநாகரிக அரசியலாகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல்வரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயல் கண்டிக்கதக்கது.