×

கஞ்சா போதைக்காக அட்டகாசம் கலெக்டர் வீட்டில் கழிவுநீர்தொட்டி மூடி திருட்டு: சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்கள்

குன்றத்தூர்: கஞ்சா போதைக்காக கலெக்டர் வீட்டில் கழிவுநீர் தொட்டியின் மூடியை திருடிய மர்ம நபர்கள் சிசிடிவியில் சிக்கியுள்ளனர். போரூர் அடுத்த முகலிவாக்கம், லலிதாம்பாள்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று முன்தினம் அவரது மனைவி மற்றும் அங்கு வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, கழிவுநீர் தொட்டியின் மீது மூடி இல்லாமல் திறந்துகிடந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் கதவுகளை திறந்து உள்ளே சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் கழிவு நீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு மூடியை எடுத்துக் கொண்டு அங்கு தயாராக நின்று கொண்டிருந்த தனது நண்பருடன் பைக் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் இதே நபர்கள் சில தினங்களுக்கு முன்பு உள்ளே புகுந்து குடிநீர் குழாயை உடைத்து குழாய்களை எல்லாம் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பலமுறை மாங்காடு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மர்ம நபர்கள், கழிவுநீர் தொட்டியின் மூடியை திருடிச் செல்லும் காட்சி வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இனிமேலாவது சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். சமீபகாலமாக மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா புகைப்பவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவர்கள் கஞ்சா போதைக்காக கழிவுநீர் தொட்டி  உள்பட பல்வேறு பொருட்களை கஞ்சா போதைக்காக திருடிவருவது தெரியவந்துள்ளது.

Tags : Attakasam Collector , Cannabis thief seizes septic tank cover: Mysteries caught on CCTV
× RELATED ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால்...