திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா. இவரது சொந்த ஊர் பாலக்காடு. இந்திய உணவுக் கழகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த இவரது தந்தை உமேசனுக்கு சென்னைக்கு மாறுதல் கிடைத்ததால் 4வது வயதிலேயே பெரம்பூரில் குடியேறினார். பள்ளி, கல்லூரிப் படிப்பைகீதா சென்னையில்தான் முடித்தார். பின்னர் வேலை கிடைத்ததால் கேரளா சென்றார். இளம் வயதிலேயே பரத நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் சென்னையிலேயே நடனம் பயின்றார். இந்நிலையில், கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளியை கடந்த மாதம்ஆன்லைன் மூலமாக, கோட்டக்கல் உண்ணிகிருஷ்ணன் என்பவரிடம் கற்க தொடங்கினார்.
ஒரே மாதத்தில் இதை கற்ற அவர், நேற்று முன்தினம் வயநாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளியூர்க்காவு கோயில் விழாவில் அரங்கேற்றம் செய்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு தமிழ் கலாசாரம் மிகவும் பிடிக்கும். தமிழ் பேசவும்,எழுதவும் நன்றாக தெரியும். எனது தாயார் அம்மிணி அம்மாவின் வற்புறுத்தலின் பேரில்தான் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினேன். கடந்த மாதம் தான் எனக்கு கதகளியை கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. தினமும் அலுவல் முடிந்த பிறகு ஆன்லைன் மூலம் இதை கற்றேன். ஒரு மாதத்தில் அனைத்தையும் கற்க முடியாது என்றாலும், என்னால் முடிந்தவரை கற்று அரங்கேற்றம் செய்துள்ளேன்,’’ என்றார்.