×

கடவுள் சாட்சியாக ரஷ்ய அதிபர் ஆட்சியில் நீடிக்க முடியாது: போலந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேச பேச்சு

வார்சா: உக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது; உலக நாடுகள் நீண்டகால சண்டைக்கு தயாராக வேண்டும்; கடவுள் சாட்சியாக ரஷ்ய அதிபர் ஆட்சியில் நீடிக்க முடியாது என்று போலந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆவேச பேசினார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ, ஐக்கிய யூனியன், ஜி7 அமைப்புகளின் நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இருந்தும் ரஷ்யப் படைகள் உக்ரைனில் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி அழித்து வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இருநாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் குண்டுவீச்சு மோதல்களும் ெதாடர்கின்றன.  இந்த நிலையில் நேட்டோ மற்றும் அதன் ஆதரவு நாடு தலைவர்களின் உச்சி மாநாடு பிராஸ்ஸஸில் நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். உயிரி, ரசாயன, அணுஆயுதங்களை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தன. தொடர்ந்து உக்ரைனில் இருந்து அதன் அண்டை நாடான போலந்து நாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள நிலையில், அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சென்றார்.

அப்போது தலைநகர் வார்சாவில் அவர் ஆற்றிய உரையில், ‘ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் அந்நாட்டின் பொருளாதார பலம் அடுத்த சில ஆண்டுகளில் பாதியாக குறையும். உக்ரைன் மீதான படையெடுப்பதற்கு முன்பு, உலகின்  பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடாக ரஷ்யா இருந்தது. விரைவில் அந்நாடு 20 இடத்திற்கு செல்லும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் நாணயமான ரூபிளின் மதிப்பை இழக்கும். உக்ரைன் மீது ெதாடுத்துள்ள மிருகத்தனமிக்க ரஷ்ய அதிபர் புடினின் போரானது ரஷ்யாவின் வியூக தோல்வி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 உக்ரைவை ரஷ்யா ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஏனென்றால் உக்ரைன் மக்கள் சுதந்திரமான மக்கள்; அவர்கள் நம்பிக்கையற்ற மற்றும் இருள் நிறைந்த உலகில்  வாழமாட்டார்கள். ஜனநாயகம், கொள்கை, நம்பிக்கை, கண்ணியம், சுதந்திரம் ஆகியவற்றில்  வேரூன்றிய பிரகாசமான எதிர்காலம் எங்களுக்கு இருக்கிறது. கடவுளின் சாட்சியாக செல்கிறேன் அந்த மனிதன் (ரஷ்ய அதிபர் புடின்) ஆட்சி அதிகாரத்தில் இனி நீடிக்க முடியாது. நேட்டோ உறுப்பு நாடுகளின் ஒரு அங்குலம் அளவிற்கு சேதம் ஏற்பட்டாலும் மேற்கத்திய நாடுகள் தலையிடும். ​​​​உலக நாடுகள் நீண்டகால சண்டைக்கு தயாராக வேண்டும்.

சில நாட்கள் அல்லது மாதங்களில் நாம் போரில் வெற்றி பெற முடியாது. ஒருபோதும் நம்பிக்கையை  இழந்துவிடாதீர்கள்; ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்; ஒருபோதும்  சோர்வடையாதீர்கள்; ஒருபோதும் பயப்படாதீர்கள்’ என்று பேசினார். அமெரிக்க அதிபரின் தனது உரையில், புடின் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்று கூறியதால், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து அதிபர் பைடனின் உரை தொடர்பாக வெள்ளை மாளிக்கை பதில் அறிக்கையை ெவளியிட்டுள்ளது. அதில், ‘அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் ‘ரஷ்யாவில் ஆட்சி மாற்றம்’ என்று அர்த்தத்தில் கூறவில்லை.

இவ்விவகாரத்தில் அதிபரின் கருத்து என்னவென்றால், ரஷ்யாவின் அண்டை நாடுகளின் மீது புடின் தனது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்று பொருள் கொள்ள வேண்டும்’ என்று விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா  மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை போலந்தில் சந்தித்தார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைன் உதவும் நாடுகள், மனிதாபிமான உதவிகள், தற்போதைய நடவடிக்கைகள், எதிர்கால வியூகங்கள் குறித்து அதிபருடன் உக்ரைன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

உக்ரைனில் போர் திறனை வலுப்படுத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நடைமுறை முடிவுகளை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. எப்படியாகிலும் நேட்டோ  உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து எவ்வித கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக எவ்வித  உடன்பாடும் அந்த நாடுகளுக்குள் ஏற்படவில்லை; ஒருமித்த கருத்தை  எட்டுவதில் ஐரோப்பிய கவுன்சில் நாடுகள் வெற்றிபெறவில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

லிவிவ் நகரம் மீது தாக்குதல்
மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது ரஷ்யப் படைகள் நான்கு ராக்கெட் தாக்குதல்களை நடத்தின. போர் தொடங்கிய நாளில் இருந்து, இந்த நகரம் மீது தாக்கப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாகும். போலந்து எல்லையில் இருந்து வெறும் 60 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள லிவிவ் நகரம் உள்ளது. நேற்றிரவு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு ராக்ெகட் எரிபொருள் கிடங்கில் மோதியது. அந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்ததாக ஆளுநர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘ராக்கெட் பறந்து வந்ததையும் தாக்குதல் நடத்திய இடத்தையும் சந்தேக நபர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

அவரது செல்போனில் லிவிவ் பிராந்தியத்தில் உள்ள சோதனைச்சாவடிகளின் புகைப்படமும் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரஷிய தொலைபேசி எண்களுக்கு அந்த நபர் அனுப்பியுள்ளார்’ என்றார். முன்னதாக லிவிவ் நகரத்தில் உள்ள எண்ணெய் சேகரிப்பு மையம் மற்றும் தொழில்துறை கட்டமைப்பு மீதும் ராக்கெட் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பல மணி நேரங்களுக்கு அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளித்தது.

ஆயுதங்களை சப்ளை செய்யுங்க!
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மேற்கத்திய நாடுகள் தங்களது கையிருப்பில் உள்ள ராணுவ தளவாடங்களின் ஒரு பகுதியை எங்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் ஏன் ரஷ்யாவிற்குபயப்படுகிறார்கள்? போர் விமானங்களை யார் வழங்குவது என்று தங்களுக்குள் விவாதங்களை நடத்திக் கொண்டுள்ளனர். எங்களுக்கு பல நாடுகள் பீரங்கி  மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய ஆயுதங்களை அனுப்புவதாக  உறுதியளித்துள்ளன. தற்போது கீவ் நகருக்கு டாங்கிகள், விமானங்கள் மற்றும் கப்பல்  எதிர்ப்பு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. எனவே அவற்றை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவை  அனைத்தும் உக்ரைனின் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல; ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்திற்காகவும் தேவைப்படுகிறது. முறையான ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது. டாங்கிகள் மற்றும் போர் ஜெட் விமானங்கள் இல்லாமல் மரியுபோலை காப்பாற்ற முடியாது. நாங்கள் ஏற்கனவே 31 நாட்களாக காத்திருக்கிறோம். நேட்டோ அமைப்பின் பொறுப்பாளர் யார்? உங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

2 ரஷ்ய விமானம் தடுத்துவைப்பு
ரஷ்ய கோடீஸ்வரர் யூஜின் ஷ்விட்லருக்கு சொந்தமான இரண்டு ஜெட் விமானங்களை இங்கிலாந்து அரசு தடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கருவூல செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘ரஷ்ய விமானங்களை ஏற்கனவே தரையிறங்கியவை. மூன்று வாரமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு ரஷ்ய விமானங்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

தேசிய காவலர் தினம்
ரஷ்யாவில் தேசிய காவலர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு வீரர்களை பாராட்டி வெளியிட்ட வீடியோ உரையில், ‘உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் தைரியமாக தங்களது கடமைகளை ஆற்றிய வீரர்களை கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது. உக்ரைன் மீதான உண்மையான போர் நிலைமை பார்க்கும் போது மிகவும் ஆபத்துகள்  நிறைந்ததாக உள்ளது. அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் எப்ப டிச் செயல்படுகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். துணிச்சலாகவும்,  தொழில் ரீதியாகவும், திறமையாகவும், தீர்க்கமாகவும், அச்சமின்றியும்  பணியாற்றி வருகின்றீர். இன்று டான்பாஸ் நகரை நமது படைகள் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றார்.

கசாப்பு கடைக்காரர்
முன்னதாக போலந்தில் உள்ள உக்ரைன் அகதிகள் மத்தியில் பேசிய அதிபர் பிடன், ரஷ்ய அதிபர் புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்’ என கடுமையாக விமர்சித்தார்.

அணுசக்தி நிலையம் மீது துப்பாக்கிச்சூடு
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக அந்நாட்டின் நாடாளுமன்றம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், ‘அணுசக்தி மையங்கள் அருகேயும் தாக்குதல் நடப்பதால், தற்போதைக்கு சேதத்தின் அளவை மதிப்பிடுவது கடினம். கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கழக மையத்தின் மீதும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

டான்பாஸ் மீது ரஷ்யா கவனம் ஏன்?
உக்ரைன் மீதான போர் குறித்து எழுதிவரும் ெஜர்மனை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மாட்டியா நில்லெஸ் கூறுகையில், ‘ரஷ்யா படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்களைத் தாக்கி வருகிறது. ஆனால், தற்போது உக்ரைனின் டான்பாஸ் நகரத்தின் மீது கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது. இப்போதைக்கு தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தி ரஷ்யா நிறுத்துக் கொண்டுள்ளது. இது அவர்களின் தோல்வியாக கருதமுடியாது. அடுத்த சில நாட்களில் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைத்து தாக்குவதற்கான சூழலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். விஷயம் என்னவென்றால், உக்ரைன் மீதா ரஷ்ய போர் எவ்வித தடையுமின்றி தொடர்கிறது. மரியுபோல் மற்றும் பிற நகரங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்’ என்றார்.

தடைகள் வாபஸ் எப்போது?
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறினால், ரஷ்யாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும். போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தால் மட்டுமே தடைகள் வாபஸ் பெறப்படும். மேலும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு இனி இருக்காது என்ற உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு இருந்தால், அவர்கள் மீது மீண்டும் தடைகளை விதிப்போம்’ என்றார். இங்கிலாந்தை பொருத்தமட்டில் இதுவரை ரஷ்ய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான 500 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்கள் மற்றும் 150 பில்லியன் பவுண்டுகள்  மதிப்பிலான வங்கி கணக்குகள் மீது தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யப் பிடியில் செர்னோபில் குடியிருப்பு
உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தின் தொழிலாளர்கள் வசிக்கும் ஸ்லாவுட்டிச் பகுதியை ரஷ்யப் படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. அப்பகுதியில் வசித்த மூன்று பேர் ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டதாக உள்ளூர் மேயரை மேற்கோள் காட்டி உக்ரைன் செய்தி நிறுவனம் இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 1986ம் ஆண்டில் உலகின் மிக மோசமான அணுமின் நிலைய பேரழிவு செர்னோபிலில் நடந்தது. அதனால், அதனை சுற்றியுள்ள பாதுகாப்பு விலக்கு மண்டலத்திற்கு வெளியே இந்த நகரம் அமைந்துள்ள. ரஷ்யப் படைகள் இந்நகரை கைப்பற்றிய நிலையில், உக்ரைன் ஊழியர்கள் அணுசக்தி நிலையத்தை தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : God ,Chancellor ,Joe Biden ,Poland , God forbid the Russian president can not rule: US President Joe Biden's angry speech in Poland
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?