சென்னை: கொரோனா 4வது அலை தமிழகத்தில் வந்தாலும் அதனை தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா காலத்தில் உயிரை காப்பாற்றியவர், மனித நேயர்கள், மற்றும் சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, சீனா, ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அடுத்த 2 மாதங்களுக்கு கவனமாக இருக்க கான்போர் ஐஐடி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
640 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் காப்பாற்றபட்டுள்ளதாக அவர் கூறினார். சாலை விபத்தில் இளைஞரை காப்பாற்றிய மன்னார்குடி செவிலியர் வனஜா, சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோருக்கு மா.சுப்பிரமணியன் விருதுகளை வழங்கினார்.