×

சித்தாமூர் ஒன்றியத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள்: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களை, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் நாங்கொளத்தூர், மணப்பாக்கம், காவனூர், நுகும்பல் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்களை நடவு செய்து, தற்போது அதனை அறுவடையும் செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நெல் இடைத்தரகர் இன்றி அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரி, அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி அந்தந்த கிராமங்களில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஏழுமலை, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழினி, ஜீவா பூலோகம், கன்னியப்பன், இனியமதி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Tags : Siddamoor Union ,MLA Sundar , Open Paddy Procurement Stations in Siddamoor Union: MLA Sundar opened
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில்...