பெரம்பூர்: ஆவடியை சேர்ந்த சின்ன சாமுவேல் (25), ராயபுரத்தில் உள்ள ஸ்கேன் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன், மின்சார ரயிலில் வேலைக்கு புறப்பட்டார். வியாசர்பாடி அருகே ரயில் மெதுவாக சென்றபோது, தண்டவாளத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள், படிக்கட்டு அருகே அமர்ந்து இருந்த சாமுவேலின் செல்போனை பறித்துள்ளனர். இதை அவர் தடுக்க முயன்றதால், ஆத்திரத்தில் கீழே இழுத்து தள்ளியுள்ளனர்.
பின்னர், அவரது செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பினர். இதில், சாமுவேலுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.