லக்னோ: சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், உபி உட்பட 4 மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. உபி.யில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத வகையில், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்த கட்சி என்ற சாதனையையும் பாஜ படைத்தது. யோகி ஆதித்யநாத்தே, இம்முறையும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் எக்னா ஸ்டேடியத்தில் நேற்று இவருடைய பதவியேற்பு விழா நடந்தது. இதில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ தலைவர் நட்டா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் யோகிக்கு உபி ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த முறை துணை முதல்வராக இருந்த கேசவ பிரசாத் மவுர்யா, இந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், அவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இவரும், பிரஜேஷ் பதக்கும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இவர்களுடன் 50 அமைச்சர்களும் பதவியேற்றனர். யோகி அமைச்சரவையில் ஒரே முஸ்லிம் அமைச்சராக டானிஷ் ஆசாத் அன்சாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அமைச்சராக இருந்த 24 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.