×

குடியாத்தம் அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: ஒருமணி நேரம் போராடி விரட்டியடிப்பு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்த ஒற்றை யானையை, வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணைக்கும் வனச்சரகமாக உள்ளது. மேலும், தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டு நாய், காட்டுப்பன்றி, காட்டுக்கோழி, குரங்கு உள்ளிட்டவை வசிக்கின்றனர்.

மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளதால், அங்குள்ள யானைகள் தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச்சரகத்தில் அவ்வப்போது நுழைவது வழக்கம். அப்போது ஆந்திரா மற்றும் தமிழக வனச்சரகத்தில் உள்ள யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால், ஒரு சில யானைகள் வழிதவறி குடியாத்தம் பகுதியில் உள்ள மலை கிராமத்தின் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்துவிடுகிறது. இவற்றை குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் விரட்டி அடித்து வருகின்றனர்.

கடந்த வாரம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, டிபி.பாளையம், கொத்தூர் ஆகிய கிராமங்களுக்குள் ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல் நேற்று ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் அந்த ஒற்றை யானை நுழைந்தது. இதனைக்கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் கிராம மக்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் ஒருமணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


Tags : Gudiyatham , Gudiyatham, single elephant, attakasam
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...