×

வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை: தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்  வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில்  மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25-கோடிக்கும் மேல் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம்.துரைபாண்டியன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில்,  வரும் 28,29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார். மேலும், வரும் 28,29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,  போக்குவரத்து, மின்வாரியத்துறை ஊழியர்கள் மார்ச் 28,29 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Chief Secretary , No pay for government employees who do not show up for work on the 28th and 29th: Chief Secretary's announcement
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...