×

திண்டிவனம் அருகே திருமண வரவேற்பு விழாவில் இருதரப்பினர் மோதல்-போர்க்களமாக மாறியதால் பரபரப்பு

திண்டிவனம் :  திண்டிவனம் அருகே திருமண வரவேற்பு விழாவில் இருதரப்பினர் மோதிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது.திண்டிவனம் அடுத்த மானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த மணமகன், புதுச்சேரியை சேர்ந்த மணமகள் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இவ்விழாவில் உணவு பரிமாறும் போது ஏற்பட்ட பிரச்னையில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

பின்னர் இருதரப்பினரும் தடி, கற்கள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திருமண மண்டபத்தில் திரண்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது புதுச்சேரியில் இருந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பேருந்தின் முன்பக்க டயரில் காற்று இறக்கி விடப்பட்டது. இதனால் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து திண்டிவனம் மற்றும் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல மணி நேரம் கடந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தின் டயர் மாற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரியில் இருந்து வந்தவர்களை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலால் அங்கு போர்க்களம் போல் காட்சி அளித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ddivanam , Tindivanam: The area turned into a battlefield as the two sides clashed at a wedding reception near Tindivanam.
× RELATED திண்டிவனத்தில் குட்கா பொருட்கள் வைத்திருந்த முதியவர் கைது