×

மணல் கடத்தலை ஒழிக்க கடும் நடவடிக்கை தாய் பூமியை சேதமில்லாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: பாரம்பரியமிக்க தாய் பூமியை எந்த சேதமும் இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம பொருட்களை கடத்தியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்க நாகை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்களுடன் இணைந்த லாரிகள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெயில், மழை என இயற்கை சீற்றங்களால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு அவற்றின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, அவற்றை விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்று கோரியிருந்தனர்.

 இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பறிமுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டது. பறிமுதல் நடவடிக்கைகளை  முடிப்பதற்கு உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, நமது தாய் பூமியை எந்த சேதமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் எந்த காரணத்தையும் முன்னிட்டும் கனிம வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.  

நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதை காண முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் நடவடிக்கைகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அதற்கு வாகன உரிமையாளர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags : Mother Earth ,Chennai High Court , Strict action to eradicate sand smuggling Mother Earth should be handed over to the next generation without damage: Chennai High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...