புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 273 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜ சட்டப்பேரவை தலைவரை தேர்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டப்பேரவை தலைவராக யோகி ஆதித்யநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில் உத்தரப்பிரதேச முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். யோகி அமைச்சரவையில் இம்முறை 2 துணை முதல்வர்கள் நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.