துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தனியார் பள்ளியில் 11வது படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி மாலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் கடந்த 11ம் தேதி துறையூர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், எம்ஏ, பிஎட், எம்பில் முடித்து விட்டு அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சிக்கத்தம்பூரை சேர்ந்த சர்மிளா(26)வுடன் மாயமானது தெரியவந்தது.
இவர் மாணவன் 7ம் வகுப்பு படிக்கும்போது பாடம் நடத்தியதும் தெரிய வந்தது.ஆசிரியையின் செல்போனை வைத்து ஆய்வு செய்ததில் திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களை காட்டியது. கடைசியாக நேற்று முன்தினம் மாலை திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருப்பது தெரிந்தது. அங்கு தோழி வீட்டில் தங்கி இருந்த ஆசிரியை மற்றும் மாணவனை துறையூர் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியை சர்மிளாவை நேற்று கைது செய்தனர். மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.