புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் மோட்டு முனீஸ்வரன், இச்சடி முனீஸ்வரர் கோயில்கள் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு கோயில் திடலில் போட்டியை ஆர்டிஓ கருணாகரன் துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அடுத்தடுத்து மற்ற காளைகள் களமிறக்கப்பட்டன.
வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆலங்குடி அருகே வம்பனில் வீரமாகாளியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவையொட்டி இன்று கோயில் திடலில் ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8.30 மணிக்கு ஆர்டிஓ கருணாகரன் துவக்கி வைத்தார். இதில் 950 காளைகள் களமிறங்கப்பட்டன. 300 வீரர்கள் பங்கேற்றனர்.