சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. 25 வயதான இவர் உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளார். கடந்த 114 வாரங்களாக இவர் முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த நாட்டில் நடந்த கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். காயம் காரணமாக அதன்பின்னர் எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஷ்லே பார்டி அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று நான் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பது கடினமாக உணர்ச்சி மிக்கதாக உள்ளது. இந்தச் செய்தியை உங்களுடன் எப்படிப் பகிர்வது என்று எனக்குத் தெரியாததால், எனக்கு உதவுமாறு எனது நல்ல நண்பரான கேசி டெல்லாக்வாவிடம் கேட்டேன். டென்னிஸ் எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், அது எனக்கு என் அனைத்தையும் கொடுத்தது , மேலும் பெருமையாகவும் நிறைவாகவும் உணர்கிறேன். ஆனால் நான் விலகி மற்ற கனவுகளைத் அடைவதற்கும், டென்னிஸ்மட்டையை கீழே போடுவதற்கும் இது தான் சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, என்றார். மேலும் ஓய்வு பற்றி நாளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பார்டியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆஷ்லே பார்டி, 2019ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன், கடந்த ஆண்டு விம்பிள்டன், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் என 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவை தவிர 2018ம் ஆண்டு யுஎஸ் ஓபன் இரட்டையரிலும், 2019ம் ஆண்டு டபிள்யூடிஏ பைனஸ் தொடரிலும் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். டென்னிசில் மொத்தம் 15 ஒற்றையர் மற்றும் 12 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். ஆஷ்லே பார்டி ஓய்வு குறித்து சர்வதேச மகளிர் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், டென்னிஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு நம்பமுடியாத தூதராக இருப்பதற்கு நன்றி, நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம் என தெரிவித்துள்ளது.