உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடைவீதி பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் சிறு கடைகளில் இரவு நேரத்தில் காவலுக்கு படுத்து தூங்கும் நபர்களிடமும், இரவு நேரத்தில் கடைகளுக்குள் புகுந்தும் மர்ம நபர் செல்போன்களை திருடி செல்வதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து செல்போன்களை திருடி செல்லும் மர்ம நபர் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகள் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து இந்த நபர் இரவு நேரத்தில் செல்போன்களை திருடி செல்வதால் கடைகளின் உரிமையாளர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான நபர் யார் என்பது குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நபரை விரைந்து பிடிக்க வேண்டும் என செல்போன்களை பறிகொடுத்தவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.