×

ஆரணி- செய்யாறு செல்லும் வழியில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்ததால் பஸ்கள் நிறுத்தம்

* டிரைவர்களிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு * கூடுதலாக 2 பஸ்களை இயக்க கோரிக்கை

ஆரணி : ஆரணி- செய்யாறு செல்லும் வழியில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்ததால் பஸ்களை டிரைவர்கள் நிறுத்தினர். இதையடுத்து டிரைவர்களிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலைக்கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். இதற்காக மாணவர்கள் அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் எடுத்து சென்று வருகின்றனர். இதற்காக தினமும் காலை 7 மணி முதல் அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 4 பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டை விட தற்போதைய கல்வியாண்டில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்காத நிலையில் படிகளில் தொங்கியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், நேற்று 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் படியில் தொங்கியபடி சென்றனர்.இரும்பேடு கூட்ரோடு அருகே செல்லும்போது அங்கிருந்த மாணவர்களும் பஸ்சில் ஏறி தொங்கியபடி சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

 இதனால் 2 பஸ்களின் டிரைவர்கள் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு, படியில் யாரும் தொங்கக்கூடாது. அடுத்த பஸ்சில் வாருங்கள். அதிகளவு ஏற்றிச்சென்றால் விபத்து ஏற்படும்’ எனக்கூறினர்.இதைக்கேட்ட மாணவர்கள், டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பின்னால் வந்த ‘மகளிர் மட்டும்’ பஸ்சில் மாணவர்கள் ஏற முயன்றனர். ஆனால் அந்த பஸ்சின் டிரைவரும் பஸ்சை நிறுத்திவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி போக்குவரத்து பணிமனை ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடம் ‘கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்’ எனக்கூறினர். இதையடுத்து கிளை மேலாளரிடம் கூறி கூடுதலாக ஒரு பஸ் வரவழைக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின்னர் அதில் மாணவர்கள் ஏறிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், ‘ஆரணியில் இருந்து செய்யாறுக்கு வழக்கமாக 4 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் அதில் ஒரு பஸ்சின் டிரைவர் திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டார். மாற்று டிரைவர் இல்லாததால், அந்த பஸ்சை இயக்க முடியவில்லை. தற்போது மாணவர்கள் நலன் கருதி வேறு பஸ்சில் பணியாற்றி வரும் டிரைவரை கொண்டு பஸ் இயக்கப்படுகிறது’ என்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘ஆரணியில் இருந்து செய்யாறுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் பாஸ் மூலம் செல்கிறோம். மேலும் மாம்பாக்கம் பகுதியில் இருந்தும் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் வருகிறார்கள். இதனால்தான் படியில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது. எனவே, ஆரணியில் இருந்து செய்யாறுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதலாக 2 பஸ்களை இயக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Arani-Seiyaru , Arani: On the way to Arani-Seiyaru, students traveled hanging on the steps
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...