×

60 கி.மீ. ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை... ஒன்றிய அரசு அறிவிப்பால் தமிழகத்தில் 6 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என எதிர்பார்ப்பு!!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்படுகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல் திருமாவளவன் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.திருமாவளவன் கோரிக்கையை ஏற்று சுங்கச் சாவடிகள் அகற்றுவதற்கான அறிவிப்பை நிதின் கட்கரி வெளியிட்டார். அதாவது, 60 கி.மீ. தொலைவுக்கும் குறைவாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் என நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

அமைச்சர் நிதின் கட்கரியின் வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் சூரப்பட்டு- வானகரம் இடையிலான 19.5 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச் சாவடிகள்,   ஆத்தூர் - விக்கிரவாண்டி இடையிலான 43 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள்,விக்கிரவாண்டி - செங்குறிச்சி இடையிலான 26 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள் செங்குறிச்சி - திருமந்துரை இடையிலான 52.5 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிகள்,சமயபுரம் - பூதக்குடி இடையிலான 43.4 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச் சாவடிகள், பள்ளிகொண்டா - வாணியம்பாடி இடையிலான 50கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிக்குள் ஆகியவை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 50 சுங்கச் சாவடிகளில் 6 விதிகளை மீறி செயல்படுவது தெரிய வந்துள்ளது. விதிகளை மீறிய சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் 6 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அண்மையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த தமிழக அமைச்சர் எ.வ.வேலு சென்னை புறநகரில் வானகரம் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,United Government , Customs, Union Government, Tamil Nadu, Nitin Gadkari
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...