சித்தூர் : சித்தூரில் சிறுமியை கடத்தி சென்ற அரசு ஊழியரை கைது செய்ய வேண்டும் என்று எஸ்பி ஆபிசில் புகார் மனு அளிக்கப்பட்டது. சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட மகளிர் அணி தலைவி அருணா, எஸ்பி செந்தில்குமாரிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சித்தூர் மாவட்டம், சாந்திபுரம் அடுத்த நஞ்சம்பேட்ட கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் கடத்தி சென்றுள்ளார்.
வேணுகோபால் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி கிராம செயலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது மகளை வேணுகோபால் கடத்திச்சென்றார் என ரால்லபுதுகூறு காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், போலீசார் உங்கள் மகள் இருக்கும் இடத்தை டிராக் செய்துள்ளோம். அங்கு செல்ல பணம் செலவாகும் என தெரிவித்துள்ளார். போலீசார் கேட்கும்போதெல்லாம் ₹10 ஆயிரம், ₹50ஆயிரம் மற்றும் ₹20 ஆயிரம் என இதுவரை ₹92 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை சிறுமியை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. முதல்வர் ஜெகன்மோகன் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க திஷா சட்டத்தை கொண்டு வந்தார்.
ஆனால், இச்சட்டத்தின் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதல்வர் பெண்களுக்கு ஏதாவது நடந்தால் 3 மணிநேரத்திற்குள் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார். ஆனால், 80 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கவில்லை. சிறுமியை கடத்திச்சென்ற வேணுகோபாலை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.முன்னாள் முதல்வர் சந்திரபாபு தொகுதியில் பெண்களுக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் ஆளும் கட்சியின் அராஜக செயல்கள் அதுபோன்று நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்ற எஸ்பி செந்தில்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அப்போது தெலுங்கு தேசம் கட்சி மண்டல தலைவி சந்திரகலா, எஸ்சி பிரிவு தலைவர் சப்தகிரி பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.