×

உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது பைக் மீது கார் மோதி தந்தை, மகன் பலி-ஆற்காடு அருகே சோகம்

ஆற்காடு :  ஆற்காடு அருகே உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது, பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் உஸ்மான் தெருவைச் சேர்ந்தவர் மசூத்அகமத்(49). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரது வளர்ப்பு மகன் முகமது மோயிஸ்(8).  அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

மசூத் அகமத் நேற்று முன்தினம்  அவரது மனைவி மற்றும் மகனுடன் மேல்விஷாரத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்றார். பின்னர் மாலையில் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, மசூத்அகமத் தனது மகன் முகமது மோயிைஸை அழைத்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். மேல்விஷாரம் பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில், தனியார் டைல்ஸ் கம்பெனி அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த பதிவு எண் இல்லாத புதிய கார் பைக் மீது மோதியது.

காரை ஓட்டி வந்த நபர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மசூத் அகமதுவை ஆற்காடு அரசு மருத்துவனைக்கும்,  சிறுவன் முகமது மோயிஸை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மசூத் அகமது சிகிச்சை பலனின்றி ஆற்காடு அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது மோயிஸ் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மசூத் அகமதுவின் அண்ணன் மதீன் அகமது ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்ஐ மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து ஆற்காடு நகர காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து காரின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் தந்தை மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arcot , Arcot: A father and son were killed when their car collided with a bike while returning from a relative's house near Arcot.
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...