×

நறுமணம் கமழும் வெட்டிவேர் மாஸ்க்!

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க முகக் கவசம் அணிவது, கைகளுக்கு உறை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது என தடுப்பு முறைகளை அரசு அமல்படுத்திய வண்ணம் உள்ளது. போகும் போக்கைப் பார்த்தால், இனி வரும் நாட்களில் மாஸ்க் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லலாம்.  

தொற்றை தடுக்க சர்ஜிக்கல் மாஸ்க், N95 மாஸ்க் என மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளை பொதுமக்கள் பயன்படுத்துவது சற்றே கடினம். காரணம், அதன் விலை.மேலும் தினம் ஒரு மாஸ்க் என எல்லோராலும் வாங்க முடியாது. இதைத் தொடர்ந்து அனைவரும் துணி மாஸ்க்குகளுக்கு மாறினர். உடைக்கு மேட்சாக மாஸ்க், நம் புகைப்படமே அச்சிடப்பட்ட மாஸ்க், கார்ட்டூன் மாஸ்க், துப்பட்டா மற்றும் ஸ்கார்ஃபுடன் இணைந்த மார்ஃப்ஸ் என வரிசைக்கட்டி வந்தன. அந்த  வரிசையில் ஆரோக்கியமான வெட்டிவேர் மாஸ்க்கினை அறிமுகம் செய்துள்ளனர் யுனிவர்ஸ் ஹெல்த்கேர் மையத்தினர்.

‘‘இந்த ஹெல்த்கேர் ஆரம்பிச்சு மூணு மாசம்தான் ஆச்சு. ரியல் எஸ்டேட், ஈவன்ட் மேனேஜ்மென்ட், ஓட்டல் தொழில் மற்றும் ரிசார்ட்தான் எங்களுக்கு அடிப்படைத் தொழில்’’ என்று பேசத் துவங்கினார் ஜெயச்சந்திரன். ‘‘கொரோனா தொற்றுக் காரணமா உலகமே முடங்கிக் கிடக்கு, நாங்க மட்டும் எம்மாத்திரம். தொழில்ல சரியான அடி, எங்களையே நம்பியிருக்கும் பணியாளர்கள் குடும்பம் வேற. அவங்களுக்காகவாவது எதாவது செய்யணும்னு யோசிச்சபோதுதான் இந்த மாஸ்க் பிஸினஸ் சட்டென தோணுச்சு. ஆரம்பத்திலே N95, சர்ஜிக்கல் மாஸ்க்குகள்தான் செய்திட்டு இருந்தோம். ஆனால் இப்போது மாஸ்க் டிரண்டானதால், எல்லாரும் அந்த தொழிலில் இறங்கிட்டாங்க.

போட்டிகள் அதிகரிச்சுடிச்சு. சரி எதாவது வித்தியாசமா மாஸ்க்குகள் தயாரிக்கலாம்னு யோசிச்ச போது ஆர்கானிக், மூலிகை மாஸ்க்குகள் தயாரிக்க திட்டமிட்டோம். ஆரம்பத்தில் மஞ்சள், வேம்பு போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்க யோசிச்சோம். அதிலெல்லாம் நடைமுறை சிக்கல் நிறைய இருந்துச்சு. குறிப்பா மூக்குல நெடி ஏறும். அதுவே சுவாச பிரச்னையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தை காக்க போய், வேறு சிக்கலில் சிக்கிடக்கூடாது என்பதால், வெட்டிவேர் வைக்கலாம்னு முடிவு செய்து இதற்கான வேலைகள்ல இறங்கினோம்’’ என்னும் ஜெயச்சந்திரன் வெட்டிவேர் கொள்முதல் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

‘‘கடலூர் மாவட்டத்தில் வெட்டிவேர் பயிரிடும் விவசாயிகளிடம் ஊரடங்கு காரணமாக போதிய போக்குவரத்து இல்லாம வெட்டிவேர்கள் அப்படியே தேங்கி இருப்பதாக கேள்விப்பட்டோம். நிறைய விவசாயிகள் வாழ்வாதாரமே இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தாங்க. மேலும் சாதாரண மாஸ்க்குகளை அதிகமா பயன்படுத்தும் போது உடல்ல சூடு அதிகரிச்சு இதனால சில உடல் பிரச்னைகளும் உண்டாகும். உடல் சூட்டுக்கு வெட்டிவேர் நல்ல மருந்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மேலும் சுவாசிக்கும் போது இயற்கையான ஒரு நறுமணமும் சேர்ந்திடுறதால புத்துணர்ச்சியா இருக்கும்’’ என்றவர் அதன் அமைப்பு முறைகளை பற்றி விவரித்தார்.

‘‘எங்களைப் பின்பற்றி நிறைய பேர் வெட்டிவேர் மாஸ்க்குகள் செய்யறாங்க. ஆனால் நாங்க தயாரிக்கும் மாஸ்க்குகளில் அதன் செயல்முறைகள் அதிகம். இரண்டு மற்றும் மூன்று கட்ட சுழற்சிகளுக்கு உட்பட்டு, சீர்படுத்தி சூப்பர் சாஃப்ட் ஃபைன் காட்டன் மாஸ்க்குகளுக்குள் வெட்டிவேரை வைக்கிறோம். நீங்க மாஸ்க் எவ்வளவு நேரம் போட்டுக்கிட்டாலும் உறுத்தவோ, குத்தவோ செய்யாது’’ என்னும் ஜெயச்சந்திரன் இந்த மாஸ்க் உற்பத்தியில் 60க்கும் மேலான அடிமட்ட தையல் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருக்கிறார்.

‘‘எங்களுடைய ஓட்டல், ரிசார்ட் பணியாளர்கள் என்னென்ன வேலை செய்திட்டு இருந்தாங்களோ அதே வேலையை இப்போ மாஸ்க்குகளுக்காக செய்யறாங்க. குறிப்பா எங்களுடைய பணியாளர்கள் குடும்பத்துக்கு எதும் செய்ய முடியாம போயிடுமோன்னு நினைச்சோம். ஆனால் மாஸ்க் பிஸினஸ் எங்களுக்கு கைகொடுத்திட்டு இருக்கு. மேலும் விவசாயிகள், அடிமட்ட தையல் கலைஞர்களுக்கும் இந்தத் தொழில் மூலமா நல்லது செய்ய முடியுது.

இந்த மாஸ்க்குகளை துவைச்சுப் பயன்படுத்தலாம். பத்து முறை துவைச்சதுக்கு அப்பறம் வெட்டிவேர் நறுமணம் குறைஞ்சு சாதாரண துணி மாஸ்க்கா மாறிடும். இதன் விலை ரூ.50தான். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் எங்க மாஸ்க்கை எக்ஸ்போர்ட் பண்ணிட்டு இருக்கோம்...’’ நிறைவாக பேசுகிறார் ஜெயச்சந்திரன்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!