திருத்தணி: திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலை, சன்னதி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. கடந்த 2019ம் வருடம் முதல் ஒரு சிலர் நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு சிலர் வாடகை கட்டணம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில், திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள அரிசிக்கடை, மார்க்கெட் வளாகத்தில் உள்ள 2 பழக்கடை, சன்னதி சாலையில் ஒரு கடை, பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடைகள் என ரூ.2 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் இருந்தன. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நேரில் சென்று வாடகை கேட்டனர். ஆனால் அவர்கள் வாடகை தரமறுத்ததால் அதிரடியாக நகராட்சி ஆணையர் ராமஜெயம் உள்ளிட்ட அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.