×

கூடுவாஞ்சேரியில் பரபரப்பு சொத்துக்காக தந்தை கொடூர கொலை: தலைமறைவான மகனுக்கு வலை

கூடுவாஞ்சேரி: சொத்துக்காக தந்தை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், தலைமறைவான மகனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் ஊராட்சி கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (65). எலக்ட்ரீசியன். இவருக்கு லோகேஸ்வரி (37) என்ற மகளும், சரவணன் (35) என்ற மகனும் (35) உள்ளனர். இதில், உமாபதியின் மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மகள் லோகேஸ்வரிக்கு 2 குழந்தைகளும், சரவணனுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு லோகேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவர், 2வது திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில், உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்திலும், காயரம்பேடு பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை லோகேஸ்வரியின் மகனுக்கும் உயில் எழுதிவிட்டார். இதனை தொடர்ந்து சரவணன், 2 வீட்டையும் தனது பெயரில் எழுதி வைக்கும்படி, கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு உமாபதி சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தனது அக்கா மகனை, கடந்தாண்டு சரவணன் கடத்தி சென்றார். அப்போது, தனது  மனைவி உமாமகேஸ்வரி பெயரில், 2 வீட்டையும் பத்திரப்பதிவு செய்து தரும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன உமாபதி, சரவணனின் மனைவி உமாமகேஸ்வரியின் பெயரில் வீட்டை எழுதி கொடுத்துவிட்டார். இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீசில் சரவணனின் மீது வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து உமாபதி, சென்னை உயர்நீதின்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது சம்பந்தமாக கடந்த 10 நாட்களுக்கு முன் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணை நடந்தது. உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாணைக்கு வந்தது. இந்நிலையில், உமாபதி நேற்று காலை 9.30 மணியளவில் தனது பைக்கில் காயரம்பேட்டில் இருந்து கன்னிவாக்கத்துக்கு வேலைக்கு புறப்பட்டார்.

கன்னிவாக்கம் தனியார் கம்பெனி அருகே சென்றபோது, திடீரென உமாபதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது இடது கை துண்டிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றனர். தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதே நேரத்தில், நேற்று காலை முதல் சரவணன் தலைமறைவாகிவிட்டார். இதனால், மகனே சொத்துக்காக தந்தையை, கூலிப்படையை வைத்து கொலை செய்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Guduvancheri , Father brutally murdered for sensational property in Guduvancheri: web for occult son
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...