சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்களின் விவரம் கணினிமயமாக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோட்டம்-4க்கு உட்பட்ட தேனாம்பேட்டை எஸ்டேட் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டப்பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களின் விவரங்களையும், அவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண விவரங்களையும் முழுமையாக கணினியில் பதிவு செய்து அதனை வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
குடியிருப்புதாரர்களின் விவரங்கள் சேகரித்தல், கட்டணத் தொகை வசூலித்தல் மற்றும் பதிவுகளை பராமரித்தல் விற்பனை பத்திரம் வழங்குவது தொடர்பான கோப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். வாரிய தலைமையிட அதிகாரிகளும் இப்பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்து விவரங்களை கணினிமயமாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பணிகளை மெத்தனமாக மேற்கொள்ளும் அலுவலர்களை எச்சரித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், வாரிய செயலாளர் துர்காமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் ஆர்.எம்.மோகன், வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.