கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், மலையாள நடிகரும் எம்பியுமான சுரேஷ் கோபியின் தம்பி சுனில் கோபி (55) என்பவர் எனக்கு கடந்த 2021 நவம்பர் 19ம் தேதி அறிமுகமானார். அவர் என்னிடம் கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி கிராமத்தில் 4.25 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளதாகக் கூறினார். இதை தொடர்ந்து சுனில் கோபியின் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 97 லட்ச ரூபாய் அனுப்பினேன். இந்நிலையில் அந்த நிலம் தொடர்பாக சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் பணத்தை திருப்பிக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்று குறிப்பிட்டிருந்தார். கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தலைமறைவாக இருந்த சுனில் கோபியை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து இவர் கோவை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.