கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே உயர்கோபுர மின்விளக்கு சரிந்து விழுந்து எரியாததால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன் புதியதாக அமைக்கப்பட்டது. ஆனால் அது கான்கிரீட் கலவை கொண்டு அமைக்காமல் தரமற்ற முறையில் உயர் கோபுர மின் கம்பம் அமைத்ததால் அடிப்பகுதியில் கம்பம் துருப்பிடித்து கடந்த 20 நாட்களுக்கு முன் சரிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேல் பஸ் நிறுத்தம் பகுதி இருளில் மூழ்கி உள்ளதால் அதிகாலையில் உழவர் சந்தைக்கு செல்லக்கூடிய கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தரமான முறையில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.