×

5 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்திய இளையராஜா

சென்னை: சென்னையில் இளையராஜா 5 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார். இசை அமைப்பாளர் இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி எதையும் நடத்தாமல் இருந்தார். இப்போது மீண்டும் தொடங்கி உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதை தொடர்ந்து சென்னை தீவுத் திடலில் நேற்று முன்தினம் இரவு ‘ராக் வித் ராஜா’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12.30 மணி வரைக்கும் 5 மணி நேரம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் தேவி பிரசாத், கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், கார்த்திக், மனோ, யுகேந்திரன், அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பலரது உயிரை பறித்து விட்டது. இசை துறையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்ரை பலி வாங்கி விட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வரவே இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’ என்றார். நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

Tags : Ilayaraja , Ilayaraja performed for 5 hours
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...