வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் செயல்பட்டு வருகிறது. கோடியக்கரை கடற்கரை ஓரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை நடுக்கடலில் இருந்து ஆலிவர்ரெட்லி ஆமைகள் கோடியக்கரை பகுதிகளுக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு சென்றது. அந்த முட்டைகளை நாய், நரி, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பாக சேகரித்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 45 நாட்கள் முதல் 60 நாட்களில் ஆமை குஞ்சுகள் வெளிவரும்.
இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். சென்றவாரம் மூன்று ஆமைகள் இட்ட 313 முட்டைகளிடம் இருந்து வெளிவந்த ஆலிவர்ரெட்லி ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர். நேற்று இராண்டாவது முறையாக 375 ஆமை குஞ்சுகளை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், எஸ்பி ஜவகர், மாவட்ட வன உயிரின காவலர் யோகேஷ் குமார் மீனா, கோடியகரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கடலில் விட்டனர்.